Sunday, May 24, 2009

நெடுங்கதையின் சுருக்கம் - 6

மனதில் போட்ட திட்டங்களும் வகுத்த வழிகளும் சரியாக ஓடிக் கொண்டிருந்தன. கணவரின் நினைவும், அந்த வீட்டின் உறவும் மனதில் ஆடும் போது மட்டும் எல்லாம் வெறுமையாகத் தெரியும். என்ன ஒரு வாழ்க்கை. குழந்தைக்கு தந்தை இல்லாமல், அவருக்கு ஒரு நல்ல வீட்டை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல் என்ன ஒரு பெண் பிறவு நான். என்று கழிவிரக்கம் பொங்கும். பல்லைக் கடித்துக் கொண்டு அவரை தொந்தரவு செய்யக் கூடாது என்ற வீம்புடன் தாக்குப் பிடித்தாள்.

எப்போதோ சில தருணங்களில் மனம் பொறுக்காமல் ஒரு வாழ்த்து அட்டை ஒரு வாழ்த்துக் குறுஞ்செய்தி என்று அனுப்புவாள். சில சமயம் பதில் வரும். சில சமயம் அப்படியே கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கும். என்னதான் செய்கிறார் என்று துப்பு விசாரிக்கக் கூட தன்மானம் இடம் கொடுப்பதில்லை. 'அதுக்காக இப்படி விட்டேத்தியா இருக்க முடியுமா! எப்படி இருக்கார் என்ன செய்கிறார்னு தெரிஞ்சுகிட்ட குறைஞ்சா போயிடுவே' என்று நான்கு முறை இடித்த பிறகு பொது நண்பர் ஒருவருக்குத் தொலைபேசி விசாரித்தாள்.

'நானும் கூட அவரிடம் பேசி நிறைய நாளாச்சு. கொஞ்சம் பொறுங்க. பேசிட்டுச் சொல்றேன்' ... 'நான் பேசினேன். நல்லா இருக்காராம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் எடுத்திருக்கிறாராம். வீட்டில் புது திரைச்சீலைகள் கூட மாட்டியிருக்கிறாராம்'

மனதுக்குள் சுழித்துக் கொண்டாள். 'பெரிய திரைச்சீலை. என்ன மாட்டியிருப்பார்னு தெரியாதா! வாழ்க்கையில தேவையானதை விட்டுட்டு வெற்றுப் பொருட்கள் பின்னால் ஓடிக்கிட்டிருக்கார்'.

கல்லூரியில் கூடப் படித்த வசந்தியை அவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தாள். இவர்களது பக்கத்து வீடு காலியாக இருப்பதை அறிந்து தனது கணவருடன் கலந்தாலோசித்து குடும்பத்துடன் இவர்கள் பக்கம் வந்து விட்டாள். 'ஏதோ ஒரு இடத்தில் இருக்கப் போறோம், உன் பக்கத்தில் இருந்து ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருக்கலாமே!'

பதின்மப் பருவத்துக்குள் நுழைந்திருந்த யாழினிக்கு வசந்தியைக் கண்டாலே ஆகவில்லை. ஆரம்பத்தில் ஏதாவது சொல்லி அவளது கண்டிப்புகளைத் தட்டிக் கழிக்கப் பழகிக் கொண்டிருந்தாள். 'அப்படி எதுவும் இல்லை. நீ சொல்வதை அவள் கேட்டு நடந்தே தீர வேண்டும்' என்று தெளிவாகச் சொல்லி விட்டாள். வசந்தி ஒருத்திக்குத்தான் கட்டுப்படுவாள் என்று ஆகி விட்டாள் யாழினி. அம்மாவின் அன்புக்கட்டளைகளுக்கு செவி சாய்த்தாலும் வசந்தி அத்தையிடம் மட்டும்தான் பயம்.

அப்பா என்று ஒரு மனிதரைக் குறித்து கேள்விப் பட்டிருக்கலாம். அது இல்லாதது போலவே நடந்து கொண்டாள். வெளியில் நண்பர்களிடம் அப்பா குறித்து பேசிக் கொண்டிருந்தாலும் அம்மாவிடம் எதுவும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

அந்த மனிதருக்கு திடீரென்று கதவு திறந்து கொண்டது போலிருக்கிறது. தொலைபேசி சந்திக்க அழைத்தார். பார்த்தார்கள், பேசினார்கள், மறுபடியும் ஒருவரை ஒருவர் புண்படுத்திக் கொள்வது மாறி விடவில்லை என்று புரிந்தது. இவள் புண்பட்டு விட மறுத்தாள். காயப்படுத்தவும் முயற்சிக்கவில்லை.

வீட்டுக்கு அழைத்துப் போனார். நிறைய பணம் செலவழித்து வீட்டை பளபளவென்று வைத்திருந்தார். ஒவ்வொரு அறையிலும் வசதிகள் வழிந்தன. ஆனால் ஒரு பெண்ணின் கைபடாத வெறுமை தெரிந்தது. சம்பளத்துக்கு செய்த வேலைகளும், காதலின்றி வாங்கப்பட்ட பொருட்களும் உயிரின்றி தெரிந்தன. 'இந்த வீடு தன் தலைவியை எதிர் நோக்கிக் காத்திருக்கிறது'. என்று ஒரு டயலாக்.

'தலைவியின் இருப்பை தாங்கிக் கொள்ள உங்களுக்கு முடியுமா என்று தெரியவில்லையே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அடுத்தடுத்த நாட்களில் அதற்கான விடை கிடைத்து விட்டது. மனிதர் உள்ளுக்குள் மாறியிருக்கவில்லை. யாழினியைப் பார்க்க வேண்டும் என்று அவருக்கு நினைப்பு இருந்தது என்று புரிந்தது. இந்த நிலையில் அவளின் மனதில் ஒரு புதிய பொறுப்பைக் கொண்டு வருவதற்கு முன்பு தான் நிலையை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அம்மா அப்பாவைப் பார்த்து வருகிறாள் என்று யாழினிக்குத் தெரிந்தது. அவளது முகத்தில் அதுவரை தெரியாத ஒரு சின்னஞ் சிறிய புது மலர்ச்சி தெரிந்தது. இந்தக் குழந்தையை இப்படி தவிக்க விடுகிறோமே என்று குற்றவுணர்வில் தவித்தாள். எங்களிருவருக்கும் இடையில் உறவு பலப்பட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

அவர் வெளியூர் போக வேண்டியிருந்த நேரம் வீட்டில் வந்து பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்க கூடவே யாழினியும். 'ஓ! வீடு அவ்வளவு அழகா இருக்கு இல்ல! அப்பா உண்மையிலேயே கிரேட்மா. பாவமும் கூட' என்று நிபுணர் கருத்தும் சொல்லி விட்டாள். அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று கேட்கவும் செய்தாள். 'இன்னும் நேரம் வரலைம்மா! கொஞ்ச நாள் போகட்டும்' அமைதியாக ஏற்றுக் கொண்டாள்.

அப்பா மாறவே இல்லை என்று சில பல பலத்த வாக்குவாதங்களுக்குப் பிறகு தெரிந்து கொண்டு ஒதுங்கி விட்டாள்.

Labels:

நெடுங்கதையின் சுருக்கம் - 5

இதற்கிடையில் மோகனுடனான உறவின் விரிசல்கள் வளர்ந்து விட்டிருந்தன. யாழினியைப் பார்ப்பதே இல்லை மோகன். அவள் காலையில் பள்ளிக்குப் போன பிறகுதான் தனது படுக்கை அறையிலிருந்து வெளியில் வருவான். இரவில் அவள் தூங்கி வெகு நேரம் ஆன பிறகுதான் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவான்.

நடு இரவுகளில் இரண்டு பேருக்கும் வாய் வார்த்தை முற்றி ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்வதும் தவறாமல் நடந்து கொண்டிருந்தது.

'இப்படியே இருந்தால் சரிப்படாது. வீட்டில் ஒரு பகுதியில் நானும் குழந்தையும் இருந்து கொள்கிறோம். மற்ற பகுதியில் அவர் இருந்து கொள்ளட்டும். என் பகுதிக்குள் அவர் வர வேண்டாம், அவர் பகுதிக்குள் நான் வர வேண்டாம்.' என்று அவளே முடிவு செய்தாள். பேச்சு வார்த்தை என்பது இயல்பாக நடப்பது என்பது மறந்தே போயிருந்தது. அவரிடம் நேரம் பார்த்து பேச ஆரம்பித்ததுமே, 'ஆமாமா இந்த எலி வளைக்குள் இரண்டு குடித்தனம். உருப்பட்ட மாதிரிதான். நீயே இந்த வீட்டில் இருந்துக்கோ' என்று எழுந்து போய் விட்டார்.

'உண்மையிலேயே வேறு இடம் பார்த்துக் கொள்கிறாரா' என்று ஆசுவாசம்தான் தோன்றியது. வெட்கமாகவும் இருந்தது தனது சுயநலத்தை நினைத்து. என்ன இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து உருவாக்கிய கூடு அல்லவா! ஓரிரு வாரங்கள் தலையைக் காட்டவில்லை. திடீரென்று ஒரு நாள், தடதடவென்று கதவைத் தட்டும் ஓசை. இவள் போய் கீழே போனால், முகம் இறுகிப் போய் கடுப்புடன் அவரும் கூட தடித்தடியாக நான்கு குண்டர்களும்.

'ஏண்டி, எவ்வளவு திமிரு இருந்தா ஒரு ஆம்பிளைய வீட்டை விட்டுத் துரத்தி விட்டு நீ தனியா வீட்டை எடுத்துக்க பார்ப்பே. இது என்ன உங்க அப்பன் கொடுத்த சொத்தா! அவரு சம்பாதிச்சு கட்டின வீடு. இந்த நிமிஷமே பெட்டியை எடுத்துக்கிட்டு வெளியில் போய் விடு'

அந்த அபாண்டத்தில் உறைந்து போனாள். கனவில் கூட நினைத்திராத ஒன்றை செய்ததாகக் குற்றச்சாட்டு. அவர் முகத்தைப் பார்க்க முயன்றாள். ஏதாவது குற்றவுணர்ச்சியின் குறுகுறுப்பு தெரிகிறதா! முகத்தின் இறுக்கம் போய் விட்டிருந்தது. உள்ளிருக்கும் உணர்வுகள் இவளுக்குப் புரிந்தன.

சே என்று ஆகி விட்டது. உலகமே தனக்கு எதிராக ஆனது போல உணர்ந்தாள். எல்லாம் போனாலும் தன்மானத்தோடு இருந்தோம் என்ற கழிவிரக்கம் பொங்கியது. கூலிக்கு வந்தவர்களுக்கு படியளப்பவரை திருப்திப் படுத்த வேண்டும். வீட்டிலிருந்து இவளது பொருட்கள் வெளியில் எடுத்துக் குவிக்க ஆரம்பித்தார்கள். குன்றிப் போனாள். 'இது என்ன வக்கிரம் இந்த மனிதர்களுக்கு. நான் எங்கு போவேன். இந்தக் குழந்தையை எப்படி வளர்ப்பேன்.'

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எட்டிப் பார்த்தார்கள். 'நான் வேணும்னா போய் பேசட்டுமா'. 'இல்லைங்க வேணாம். உங்க வீட்டில இருந்து கொள்ள மட்டும் இடம் கொடுங்க. கொஞ்ச நாள்ல வேறு இடம் பார்த்துக்கிட்டு போகிறேன்'. மாலதியம்மா தான் தங்கியிருந்த இடத்திற்கு இரண்டு பேரையும் அழைத்துப் போனார்.

இந்தக் கெட்ட கனவிலிருந்து வெளியில் வர எத்தனை யுகங்கள் பிடிக்குமோ கடவுளே! குழந்தை மலங்க மலங்க விழித்தாள். தனியாக எப்படி இந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கப் போகிறேனோ! இது வரை தனியாகத்தான் வளர்த்தது வசதியாக மறந்து போயிருந்தது.

வாழ்க்கை அது போக்கில் ஓடத்தானே செய்கிறது. அடுத்த நாளும் விடிந்தது. குழந்தை பள்ளிக்குப் போக வேண்டும். அவளது வாழ்க்கையில் ஒரு சுயம் ஆரம்பித்திருந்தது. மிகச் சிறிய அளவில் தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் அற்புதத்தை அவதானித்துக் கொண்டிருந்தாள்.

தான், தன் கருத்துக்கள், தனது வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு இப்போது உதவிக் கரங்கள் நீண்டன. கல்லூரியில் கூடப் படித்த நெருங்கிய தோழி நடந்ததை அறிந்து ஓடோடி வந்தாள். 'என்னடீ இது, நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். இப்படி இன்னொருத்தங்க வீட்டில் இருப்பதுதான் உனக்கு தெரிஞ்சுதா! (நல்ல வேளை மாலதி அதைக் கேட்டிருக்கவில்லை). குழந்தை எப்படி நார்மலா வளரும். நாங்க வாங்கிப் போட்ட பிளாட் நுங்கம்பாக்கத்தில் சும்மாத்தான் கிடக்குது. நீ அதை எடுத்துக்கோ! வாடகை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்"

நன்றி சொல்லக் கூடத் தெரியாமல் அதை ஏற்றுக் கொண்டாள். குழந்தைக்கு அவளுக்கே அவளுக்கு என்று ஒரு அறை கிடைத்து விட்டது. கீழே இறங்கிப் போனால் மாலையில் விளையாட ஒரு பெரிய குழந்தைகள் கூட்டம். திரும்ப மேலே கொண்டு வருவது பெரும் பாடாக இருக்கும். சிரிப்பும், கலகலப்பும், சிணுங்கல்களும், கண்ணீரும், பேச்சு அருவியும் என்று குழந்தை வாழ்க்கை பொலிந்து கொண்டிருந்தது.

மெல்ல மெல்ல தனது தொழில் முறை தொடர்புகளை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தாள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டாள். குடியிருப்போர் நலச் சங்கத்தில் பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். இந்தக் குடியிருப்பு மேம்பட்டால், எனக்கும், என் குழந்தைக்கும் (பிற்காலத்தில் இங்கு வந்து விடப் போகும் என் கணவருக்கும் என்று ரகசியமாகச் சேர்த்துக் கொண்டாள்) நல்லதுதானே என்று ஏதோ பிடித்து ஆட்டுவதைப் போல உழைத்துக் கொண்டிருந்தாள்.

நிறுவனம் ஒன்றுக்குப் போய் வேலை செய்யவில்லையே தவிர நாளைக்கு 24 மணி நேரத்துக்கும் திட்டமிட்டு ஒழுங்கு அமைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்தாள்.

'இவ்வளவு புத்திசாலித்தனமான குழந்தையை மட்டும் கான்வென்டு பள்ளிக்கு அனுப்பி இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைச்ச எவ்வளவு நல்லா இருக்கும். குழந்தைக்கு சுய இரக்கம் வந்து விடும். நீ ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறே!' இந்தக் கேள்வி மட்டும் அவ்வப்போது முளைத்துக் கொண்டே இருக்கும். பலருக்கு அதை நம்பவே முடியாமல் இருந்தது.

'ஏம்மா, நான் இங்கிலீஷ் மீடியத்தில் படிச்சா இன்னும் நல்லா இருக்குமோ!' என்று குழந்தையே கேட்கும் நேரங்கள் மட்டும் வயிற்றில் கத்தியைச் சொருகும் உணர்வைக் கொடுக்கும். ஒருவேளை நாம் செய்வது தவறோ! மனதைத் திடப்படுத்திக் கொண்டு நூறாவது முறையாக தனது நம்பிக்கையை விளக்குவாள்.

ஏழாவது மாடியில் வசிக்கும் அம்மா ஒரு பெரிய நூல் தொகுப்பு வைத்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு நூலகம் போல இருக்கும். யாழினியை புத்தகங்களுக்கு அறிமுகப்படுத்துவதை தனது கடமையாக எடுத்துக் கொண்டார். அவளுடன் சேர்ந்து அம்மாவும் நிறைய படிக்கலானாள்.

தன் மீதும் தனது வாழ்க்கை மீதும் ஓரளவு தன்னம்பிக்கை வந்த பிறகு தனது பழைய கல்லூரித் தோழர்களை தொடர்பு கொள்வதில் இருந்த தயக்கத்தை விட்டொழித்து அவர்களை வீட்டுக்கு வரவேற்க ஆரம்பித்தாள். அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் யாழினியோடு போய் வந்தாள். நெருக்கமான நட்பு என்று சொல்லிக் கொள்ளும் வட்டம் வளர்ந்து கொண்டே போனது.

'பெரியவங்க எல்லோரிடமும் மதிப்பு காட்டணும். அவங்க சொல்லுவதை கவனமா கேட்டு நம்மை நாமே வளர்த்துக்கொள்ளப் பார்க்கணும்' என்று யாழினிக்குப் புகட்டிக் கொண்டே இருந்தாள்.

இதற்கிடையில் மாலதியம்மாவுக்கு பணியிட மாற்றம் கிடைத்து அவர் தன் ஊருக்குத் திரும்பிப் போய் விட்டார். மறக்காம வாரா வாரம் தொலைபேசணும், விடாம தொடர்ந்து கடிதம் போடணும் என்று பல உறுதி மொழிகள் வாங்கிக் கொண்டு புறப்பட்டு போனார்.

'உன் குழந்தை இன்னும் சின்னப் பொண்ணு இல்லம்மா. வளர்ர வயசு. உன் வறட்டு கொள்கைகள் படி குருணைக் கஞ்சியும், அவித்த காய்கறியும் மட்டும் போதாது. இன்னும் நல்ல சத்தான உணவு எல்லாம் கொடுக்கப் பாரும்மா. கொஞ்சம் வண்ண மயமா ஆடைகள் வேணும். பாட்டு கேட்க ரேடியோ, டிவி வேணும். ஒன்னை மாதிரியே துறவியா குழந்தையும் வளரணுமா!'

இவங்க சொல்றது சரிதான். வீட்டில் நடைமுறைகளை மாற்ற ஆரம்பித்தாள். பாசாங்கு, பொய், ஒருவரை ஒருவர் ஏய்த்தல் இவை இல்லாத ஒரு சூழலில் தன் வீடு இயங்குவது மனதை நிறைத்தது. இப்படியும் வாழ முடியும் என்று உலகுக்குக் காட்டுவோம். யாழினிக்கு இன்னும் கொஞ்சம் பண வசதி, இன்னும் நிறைய ஆடம்பரங்கள் தேடினாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை குழந்தை.

Labels:

நெடுங்கதையின் சுருக்கம் - 4

குழந்தை அம்மாவைப் போலவே வளர்ந்து வந்தாள். முகம் மலர்ந்து சிரிக்கையில் அம்மாவுக்கு உலகே மறந்து போகும். பக்கத்து வீடுகளில் போய் நட்பு பிடித்துக் கொண்டு வந்தாள். சக வயதுக் குழந்தைகளுடன் விளையாடப் போனாள். அவர்களைப் போல உடுப்புகளும், அவர்களிடம் இருப்பதைப் போல பொம்மைகளும் தன்னிடம் இல்லை என்று குறை சொல்லத் தெரியாத பருவம் அது. அவளது உலகில் மகிழ்ச்சி வருத்தம் என்று பிரித்துப் பார்க்கும் பேதம் வந்து விடவில்லை.

அக்கம் பக்கம் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் CBSE, மெட்ரிகுலேஷன் பள்ளி என்று போய்க் கொண்டிருந்தார்கள். யாழினியை பள்ளியில் சேர்க்கும் நாள் வரும் போது, எல் கே ஜி, யு கே ஜி எல்லாம் தவிர்த்து இரண்டாவது தெருவில் இருந்த மாநகராட்சி நடத்தும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் கொண்டு விட்டாள்.

நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் அதிர்ச்சி. 'இந்தக் குழந்தையையும் உன்னைப் போலப் பைத்தியமாக வளர்த்துக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கப் போகிறாயா' என்று கத்திக் கொண்டு போனாள் அம்மா. 'இந்தக் காலத்தில் யாராவது தமிழ் மீடியம் படிப்பாங்களா! அதுவும் அரசாங்கப் பள்ளியில. அப்புறம் சேரிக் குழந்தைகளுடன்தான் சேரும். பிச்சைக்காரியாகத்தான் வளரும்' இது மோகன்.

'இந்த ஊரில் பிறந்து, இந்த ஊர் சாப்பாட்டை சாப்பிட்டு வளரும் என் குழந்தை இந்த ஊர் குழந்தைகளுடன் இந்த ஊர் படிப்பைப் படிக்கட்டும். அப்படி மாநகராட்சி பள்ளியில் ஏதாவது குறை இருந்தால், என் குழந்தை சாமர்த்தியமா மாற்றிக் காட்டுவா'

'இன்னும் நீ வளரவேவில்லை. காலேஜில படிக்கும் போது இருந்த அதே கனவு காணும் ஆதர்ச வாதியாகத்தான் இருக்கிறாய், குழந்தையின் எதிர்காலத்தை நினைச்சாத்தான் கலக்கமா இருக்கு'

'என் குழந்தை பிறந்த பொழுது நான் பிளாஸ்டிக்கில் செய்த மூத்திரத் துணியைப் பயன்படுத்தவே இல்லை. பருத்தித் துணியைத்தான் கட்டி விடுவேன். அதை நனைத்ததும், நான் எழுந்து மாற்ற வேண்டியிருந்தது. ஆனால் அதுதான் அவளுக்கு இயல்பாக இருந்தது. நிறைவாக வளர்ந்தாள். அப்போ என்னைப் பைத்தியம் என்று சிரித்தவர்கள் ஏராளம். ஆனால் இன்னைக்குப் பாருங்க. குழந்தையின் தோலுக்கும், உடலுக்கும் ஆரோக்கியமா இருக்க பருத்தித் துணியைப் பயன்படுத்துங்க என்று எவ்வளவு பேர் யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க'

'இன்னைக்கு மாநகராட்சிப் பள்ளியில் சேரிக் குழந்தைகளுடன் படிக்கப் போகும் இந்தக் குழந்தையின் வளர்ச்சிதான் சிறப்பா இருக்கும்ணு 10 வருஷத்துக்கு அப்புறம் பாருங்க'

குழந்தைக்குப் படிப்புக்கும் வளர்ச்சிக்கும் தேவையான வருமானத்தையும் ஈட்டிக் கொண்டிருந்தாள். பெரிய செல்வச் செழிப்பில் புரள வேண்டும் என்ற கனவு இல்லை. யாழினி நிறைவான ஒரு வாழ்க்கையை நடத்த வழி காட்ட வேண்டும். அது போதும். அப்படி உருவாக்கும் வழியில் இன்னும் பலர் நடக்க வழி செய்ய முடியும் என்றும் கனவுகள் வளர்ந்தன.

நாளொரு கேள்வியும், பொழுதொரு சந்தேகமுமாக துளைக்க ஆரம்பித்தாள். நட்பு வட்டங்களும் விரிந்தன. நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது அறிமுகமான ஒரு பெண்மணி தங்கும் இடம் தேடிக் கொண்டிருந்தார். எதிர்பாரா விதமாக பணி மாற்றம் கிடைத்து விட, பள்ளிக்குப் போகும் குழந்தைகளையும் கணவரையும் பாதிக்காமல், இவர் மட்டும் இங்கு தங்கி பணி புரிய திட்டமிட்டு வந்திருந்தார். வாரா வாரம் போய் விட்டு வரலாம்.

மாலதியம்மா, முதல் நாளிலிருந்தே யாழினியின் மீது காதலாகிப் போனார். 'இந்தக் குழந்தை பெரிய ஆளா வருவா! இவளை எப்படி ஆக்கிக் காட்டுறேன் பாரு!' என்று பாசத்தைப் பொழிந்தார். அவரது இரண்டு பையன்களும் வளர்ந்து கல்லூரிக்குப் போகும் பருவம். ஒரு பெண் குழந்தையை வளர்க்க தனது கனவுகளை எல்லாம் செயல்படுத்த முனைந்தார்.

'நான் ஒருத்தியே அவளை வழி நடத்திக் கொண்டிருந்தா அவளுக்கு முதிர்ச்சி வராது. மாலதியம்மா இருக்கும் போது நிச்சயமா நிறையக் கற்றுக் கொள்வாள்.'

'யாழினிமா, இனிமேல் இந்த பெரியம்மா சொல்வதைக் கேட்டு நடக்கணும். சரியா!'

இது என்ன கலாட்டா என்று குழப்பத்துடன் தலையாட்டியது குழந்தை.

'குழந்தைக்கு நீச்சல் கத்துக் கொடுக்கணும், கால்பந்து விளையாடத் தெரியணும். நாலு இடத்துக்குப் போய்ப் பழகணும்' என்று வீட்டிலும் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. 'ஆமாமா, இதெல்லாம் உலகத்தில் உருப்படத் தேவையானதில்லையா, எனக்கு இது நாள் வரை எப்படி இது தெரியாம போச்சு' என்று சலித்துக் கொண்டு மாலதியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முயன்றாள்.

மாலதிக்கு இருவரின் மீதும் பாசமான பாசம். குழந்தையின் நடையிலும், பேச்சிலும் முதிர்ச்சி தெரிய ஆரம்பித்தது. வெளியாட்களிடம் தன்னம்பிக்கையுடன் பழக ஆரம்பித்தாள். மாலதி பெரியம்மாவுடன் சேர்ந்து கொண்டு பெண்ணும் அம்மாவும் மாலை நேரங்களில் விருந்துகளுக்குப் போனார்கள். காபி ஷாப்புகளுக்குப் போனார்கள். மனமகிழ் மன்றங்களுக்குப் போனார்கள்.

அடிக்கடி திரைப்படங்களுக்கும் இழுத்துப் போனாள். இந்தச் சின்னஞ்சிறு குடும்பத்தின் வட்டம் பெரிதாக ஆரம்பித்தது. பக்கத்து வீடுகளில் இருந்தவர்களும் ஆர்வத்துடன் பழக ஆரம்பித்தார்கள்.

எங்கூட வேலை பார்க்கும் மிஸஸ் டிசோசாவையும் அவங்க அக்கா மிஸஸ் பெர்னாண்டசையும் அறிமுகம் செய்து வைக்கிறேன். அவங்க மாதிரி பழக்கம் எல்லாம் இருந்தாத்தான் யாழினிக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அந்த நட்பு பச்சென்று பிடித்துக் கொண்டது.

யாழினியும் அம்மாவும் நடத்தும் பொய்யில்லாத சிறிய வாழ்வும், யாழினி கற்கும் மாநகராட்சிப் பள்ளிக் கல்வியும், அன்பே நிரம்பிய நட்புணர்வும் பலரை கவர்ந்தன. எதிர்பாராத திசைகளிலிருந்து உதவிகளும், நட்புகளும் வளர்ந்தன.

Labels:

நெடுங்கதையின் சுருக்கம் - 3

உள்ளத்துக்கும் உடலுக்கும் எந்த ஆதரவும் இல்லாமல் வயிற்றில் வளரும் இன்பப்பந்தை சுமந்து கொண்டிருந்தாள். இந்தக் குழந்தை தான் பார்த்த சிறுமைகளுக்கும் முடங்கல்களுக்கும் உட்பட்டு விடக் கூடாது என்று நினைத்துக் கொள்வாள். மருத்துவமனைக்குப் போய் வருடி மூலம் வயிற்றில் வளரும் குழந்தையின் படத்தை எடுத்துக் கொண்டாள். அதைப் பார்த்து குட்டிப் பாதம், சின்னக் கை என்று கற்பனை செய்து பூரிக்கப் பார்த்தாள். மற்ற எல்லோருக்கும் வேடிக்கையாகவும் கிண்டலாகவும் இருந்தது அவளது நடவடிக்கைகள்.

அவளது எண்ணங்களும் நினைப்புகளும் முழுவதும் குழந்தையின் பக்கம் திரும்பி விட்டிருந்தன. கூடவே கணவரின் அலுவலகப் பணிகளிலும் தனது மூக்கை நுழைத்துக் கொண்டுதான் இருந்தாள். குழந்தை பிறந்து விட்டால் தன்னால் அவ்வளவு செய்ய முடியுமா?

வாரங்கள் உருண்டோடின. குழந்தை பிறக்க வேண்டும். மருத்துவமனைக்குப் போக வேண்டுமா? எந்த மருத்துவமனைக்கு? இடையில் கிடைத்த ஒரு நல்லுணர்வு இடைவெளியில் ஒரு முனைப்பெடுத்து மருத்துவமனை கூட ஏற்பாடு செய்து விட்டார். தயாரிப்புகள் சுறுசுறுப்பாக செய்தாள். உதவிக்கு வைத்திருந்த அம்மாவும் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் பெரிய அளவில் வாக்குவாதங்களும், புண்படுத்தலும், சச்சரவுகளும் தொடர்ந்து கொண்டிருந்தன.

வலி எடுத்து மருத்துவமனைக்குப் போகும் நேரம் வரும் போது கணவன் கூட வர வேண்டும் என்று அவளுக்கு எதுவும் நினைப்பில்லை. 'சண்டை போட்டுக்கிட்டு முறைச்சிட்டு இருந்தா இருக்கட்டும்' என்று வீம்போடு கிளம்பி விட்டாள். உதவிக்கு பக்கத்து வீட்டுப் பையன். அவனை அப்படிப் பயன்படுத்திக் கொள்வது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவனுக்கு ஏதோ பரிவு, ஆர்வமாகவே உதவிகள் செய்தான்.

"நான் குழந்தை பிறந்ததும் வந்து பார்க்கக் கூட மாட்டேன் என்று நினைத்திருந்தேன். ஏதோ பெரிய ஆள் மாதிரி பேசினாயே, தனியாகவே எப்படி இருந்தது" என்று பிற்பாடு கேட்ட போது எதுவும் வருத்தம் வரவில்லை. இதில் என்ன சொல்லிக்காட்ட இவ்வளவு இருக்கிறது என்றுதான் தோன்றியது.

பிறந்த நாளிலிருந்தே குழந்தைக்கு தரித்திரம்தான் வாய்த்திருந்தது. தாயின் கவனிப்பைத் தவிர அன்பு எந்தத் திசையிலிருந்தும் வரவில்லை. உதவிக்கு வந்த நண்பன் கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் வர இவள் மனது இடம் கொடுக்கவில்லை. எப்படியாவது வளரட்டும் என்று ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துப் பார்த்து பாலூட்டி, சீராட்டி, நீராட்டி, தன்னால் முடிந்த உடை மாட்டி அழகு பார்த்திருந்தாள்.

தந்தை முற்றிலும் ஒதுங்கியிருந்தார். அவளுக்குத் தாங்க முடியவில்லை. கணவனின் அரவணைப்பும், அவருடன் சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட நட்புறவுகளும் தனக்கு மறுக்கப்படுகின்றன என்று பொங்கி பொங்கி வந்தது. அந்தச் சின்னஞ் சிறு உயிர் அவளது உடலையும், மனதையும் உயிரையும் முழுமையாக ஆக்கிரமித்த நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் மல்லுக்கட்டி சண்டைக் காரியாகிப் போனாள். கணவருக்கு மிகவும் நல்லதாகப் போய் விட்டது.

தனது வாழ்க்கை தொலைந்து போனதே என்ற ஆத்திரத்துடன் இவளையும் குழந்தையும் இழித்துப் பேசவும் தயங்கவில்லை. மூன்றாவது நபர் மூலமாக அவர் தன்னைக் குறைத்துச் சொன்னது தெரிய வந்த போது குன்றிப் போனாள். அவர் மீது இருந்த அன்பும், ஒரு காலத்தில் பொங்கி வழிந்த காதலும் வெறுப்பாக உருப்பெற்றன. 'இந்தக் குழந்தைக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது'

வீட்டில் சமையல் நின்று போக ஆரம்பித்தது. குழந்தைக்கு மம்மு செய்தால் அதில் ஒரு பகுதியை தானும் சாப்பிட்டுக் கொண்டாள். அவரும் அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. முகத்தில் வாட்டம் சில சமயங்களில் தெரிந்தது. தனக்குத் தெரிந்தபடி நட்புகளையும் உறவுகளையும் வளர்த்து வாழ்வை வேறு திசையில் செலுத்திக் கொண்டிருந்தார்.

இவளும் குழந்தையும் ஒரு அறைக்குள் முடங்கிக் கொண்டால், நண்பர்களை வரவேற்று விருந்துகள் நடத்துவது ஆரம்பித்தது. ஆரம்பத்தில் தாங்க முடியாத ஆத்திரம் வந்தாலும், போகப் போக பழகி விட்டது.

இவளது ஒவ்வொரு செயலும் வாழ்க்கையை குலைத்துக் கொண்டிருந்தது. குழந்தை ஒட்டிக் கொண்டிருந்தது. இவளை விட்டு வேறு யாரிடமும் போவதற்குக் கூட மறுத்தது. குழந்தைக்காக மட்டும் வாழ்வதாகப் போனது. 'இது என்ன பைத்தியக்காரத்தனம்! ஒருவருக்கொருவர் அன்பைச் சொரிய ஒரு வாழ்க்கைத் துணை, அப்பாடா என்று இளைப்பாற ஒரு வீடு, அதில் குழந்தை வளர வேண்டும்' என்றுதான் அவள் கனவு கண்டிருந்தாள். எல்லாமே கனவாகவே போய்க் கொண்டிருந்தன.

இன்னமும் கணவரது விவகாரங்களில் தன்னால் முடிந்தவற்றை செய்ய முயன்று கொண்டிருந்தாள். அதில் கருத்து வேறுபாடுகள் பலமாக வெடித்தன. இந்த நிலைமை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்!

மோசத்திலிருந்து மிக மோசமாக போனது நிலவரம். இருவருக்கும் உறவே அற்றுப் போகும் நாள் வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. குழந்தைக்கு வளரும் வயதுக்கான ஆகாரங்கள் கொடுக்க முடியாமல். குருணைக் கஞ்சி காய்த்து புகட்டி பசியாற்றும் நாட்கள் அடிக்கடி வந்தன. கஞ்சி குடித்து வளரும் குழந்தைகள் சாதிக்க முடியாதா என்ன என்று வழக்கம் போல தனது தத்துவ மனதால் சமாதானப் பட்டுக் கொண்டாள். குழந்தையை பக்கத்து வீட்டு அம்மாவின் பராமரிப்பில் விட்டு விட்டு பகுதி நேர வேலைகளுக்கு ஓடினாள். அதில் வரும் காசில் ஒரு ஆப்பிள் வாங்கிக் கொடுத்து விட முடியாதா!

என்ன ஆனாலும், கணவனிடம் காசு என்று கேட்டு விடக் கூடாது. அவருக்கு மனதில்லாமல் பொருள் வாங்கி இந்தக் குழந்தைக்குக் கொடுத்து விடக் கூடாது என்று ஒரு வீம்பு. அவனிடம் இவளை விட அதிகமான வீம்பு. 'ஒரு பொம்பளைக்கு என்ன அப்படி ஒரு இறுமாப்பு. எல்லாத்தையும் தானே பார்த்துக்குவோம் என்று திமிர். இறங்கி வராமலா போய் விடுவா' என்ற கடுப்பு.

இப்படி எதிரும் புதிருமான பகை உணர்வு பொங்கும் இரண்டு பேர் ஒரே கூரைக்குள் இருக்க வாழ்க்கை நரகமாகிப் போனது. குழந்தைக்கும் கவனிப்பு குலைந்தது. அவரது வாழ்க்கையும் சீரழிந்தது. ஆனாலும் விட்டு விடுதலையாக இருவருக்கும் மனமில்லை. இழுத்துக் கொண்டே போனது.

Labels:

நெடுங்கதையின் சுருக்கம் - 2

அவரது கரிசனத்தை நம்பி நான் இருக்கக் கூடாது. நான் சுயமாக மகிழ்ச்சியாக இருக்கும் போதுதான் எங்கள் உறவு ஆரோக்கியமாக இருக்கும்' என்று உறுதி பூண்டு பல்லைக் கடித்துக் கொண்டு பணியில் கவனம் செலுத்தினாள். இன்னொரு ஊரில் இருந்த அலுவலகத்தின் கிளைக்கு மாற்றல் கிடைத்து சம்பளமும் இரண்டு மடங்காக உயர்ந்தது.

அங்கு தங்குவதற்குக் கிடைத்த இடத்தில் ஒரு வெளிநாட்டுத் தம்பதி. அந்தப் பெண்மணிக்குக் குழந்தை பிறக்க இருந்தது. அவர்கள் வீட்டில் கட்டண விருந்தாளியாக பலரை நேர்முகம் கண்டு இவள் அவர்கள் மனதுக்குப் பிடித்துப் போனாள். ஏற்கனவே அக்காவின் குழந்தைப் பிறப்பில் கிடைத்த அனுபவங்களை எல்லாம் மனதில் இருத்தி எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருந்தாள். புதிய அலுவலகத்தில் வேலையில் இறங்கி விடவே இல்லை. முதல் அலுவலகத்தில் ஆரம்பத்தில் செய்த சாதனைகள் எல்லாம் கடைசி ஆண்டுகளில் கொஞ்சம் சறுக்கும் போது கை கொடுத்தன். இங்கோ ஆரம்பத்திலிருந்தே கெட்ட பெயர்தான்.

மோகனோ உள்ளும் வெளியுமாக அலைக்கழிந்து கொண்டிருந்தார். இவளையும் அலைக்கழித்தார். அலுவலகப் பணி, நட்பு, மனதுக்கு நிறைவளிக்கும் சின்னஞ்சிறு ஒரு உயிர் என்று மூன்று படகுகளில் கால் வைத்து இழுபட்டுக் கொண்டிருந்தாள்.

அலுவலகப் பணியில் சாண் ஏறினால் முழம் சறுக்கம் என்று வீழ்ச்சி மட்டும் தொடர்கதையாக இருந்தது. அதில் கவனம் செலுத்த மனமே வரவில்லை. அதற்கு மூன்றாவது இடம்தான். இந்த ஐரோப்பியக் குழந்தைக்கு நினைவு தெரிய ஆரம்பித்த பிறகு இவள் அவ்வளவு தேவையாக இல்லை. குழந்தையின் தேவைகளை இவளால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. இடைவெளி வளர்ந்து கொண்டே போனது. 'இது என்ன பெரிய விஷயம். எல்லா இடத்திலும் மனிதர்கள் ஒன்றுதான். இந்தக் குழந்தைக்கு நான் பணி செய்ய முடியாதா என்ன. அன்பு மட்டும் இருந்தால் எதையும் சாதித்து விடலாம்' என்று விடாப்பிடியாக முயன்று கொண்டிருந்தார்கள்.

குழந்தையின் பெற்றோரும் பொறுமையான புரிவுணர்வுடன் இவளுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த வகையில் இவளுக்கு உதவி செய்தார்கள். அது நிச்சயமாக போதுமானதாக இருக்கவில்லை. 'இப்படி ஒவ்வொரு குழந்தைக்குப் பின்னால் ஓடிக் கொண்டே இரு' என்று நாளொரு சச்சரவும் பொழுதொரு தொலைபேசி சண்டையுமாக உறவு வலுவிழந்து கொண்டிருந்தது.

இரண்டு ஆண்டுகளில் குழந்தைக்கு தான் எந்தவிதத்திலும் உதவியாக இல்லை என்று இவளுக்கு உறைத்தது. குழந்தையின் அம்மாவுக்கும் தெரிந்தது. தொடர்பை வெட்டுவதை அந்த அம்மாவே செய்தார். 'ஓரிரு மாதங்களில் நாங்கள் எங்க ஊருக்குத் திரும்பப் போறோம். அதுவரை நீதான் குழந்தையை பார்த்துக்கணும்' காரணங்கள் என்னவென்று இரண்டு பேருக்குமே புரிந்தது.

'நானா இருந்தால் அப்படிச் சொன்ன அந்தக் கணமே பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பியிருப்பேன். வெட்கங்கெட்ட பெண் நீ. அதற்குப் பிறகும் அவங்க வீட்டில் தங்க உனக்கு எப்படி மனசு வந்தது'. காயப்படுத்துகிறோம் என்று தெரியாமலேயே ஒருவர் பேசுவாரா என்ன! உள்ளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தாள்.

அலுவலகத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து மூட்டை கட்டச் சொல்லி விட்டார்கள். கிட்டத்தட்ட ஆரம்ப கட்டத்தில் வந்து விட்டிருந்தாள். 'எது போனாலும் போகட்டும். எனக்கென்று ஒரு துணை இருக்கிறதே. அவர்களது கனவு வீடு முழு உருப்பெற்று நனவாகி எழுந்து நின்றது. அதைப் பார்க்கும் போது பூரித்துப் போனது.

' எல்லாம் கெட்டுப் போனாலும், சாகும் வரை துணையென்று இருக்க ஒரு இணை இருக்கிறாரே' என்று திருமணம் செய்து கொள்ளும் முயற்சிகளை ஆரம்பித்தாள். அவருக்கு என்ன கட்டாயமோ, இழுத்த இழுப்புக்கு வந்து கொண்டிருந்தார், சிலசமயம். பல சமயம் வன்மையான எதிர்ப்புகள், கருத்து வேறுபாடுகள். என்ன நடந்தது என்று திரும்பிப் பார்க்கக் கூடத் தவிர்க்க நினைக்கும் அளவில் திருமணம் நடந்து முடிந்தது. அதில் உடைந்த கனவுகள், சரிந்த கோட்டைகள் ஏராளம்.

திருமண வாழ்க்கை ஆரம்பித்தது. இவ்வளவு நாள் 'காதலித்து'க் கைப்பிடித்ததாலோ என்னவோ தேன்நிலவு காலம் என்றெல்லாம் கூட தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே சலிப்புத் தட்டியிருந்தது அவருக்கு. காதல் உயிர்ப்புடன் இருக்கிறதோ இல்லையோ இயற்கையின் நடப்புகள் நடந்து கொண்டே இருந்தன. வேறு ஏதாவது நிறுவனத்தில் சேருவதற்கு முயற்சிகள் எதுவுமே எடுக்கவில்லை. 'நம்முடைய வருமானத்தை இவர் எதிர்பார்ப்பாரா என்று தெரியவில்லையே! அதை விடுவோம். வீட்டை நல்லபடியாக வைத்து அவருக்கு குறை இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.'

அவரது அலுவலகப் பணிகளுக்கு நான் எப்படி உதவ முடியும். அலுவலக நண்பர்களுக்கு விருந்து அளிக்க அவருடன் பேசி உற்சாகமாக ஏற்பாடுகள் செய்தாள். அவருடன் பேசி என்னென்ன மாதிரி உதவிகள் வேண்டும் என்று கேட்டுக் கேட்டுச் செய்தாள். அலுவலக வாழ்க்கையில் வெற்றியடைந்தால் அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சி என்னிலும் திரண்டு விடாதா என்று தன்னை அதில் மூழ்கடிக்க ஆரம்பித்தாள். பணி அவருடையதா அல்லது இவளுடையதா என்று சண்டை போட்டுக் கொள்ளும் ஒரு கட்டம் வந்து விட்டது. தான் வெளியாள்தான் என்பது உறைக்கவே இல்லை அவளுக்கு. பைத்தியம் போல ஓடிக் கொண்டிருந்தாள்.

உள்ளத்தில் ஏமாற்றங்களுடனும் வெறுமையுடனும் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. வயிற்றில் ஒரு உயிர் அசையும் உணர்வும் கனவும் கற்பனையும் எண்ணங்களும் உடலைத் தழுவின. சில நாட்களுக்கு உறைக்கவேவில்லை. நாமும் ஒரு தாயாக முடியுமா! குழந்தைகள் குழந்தைகள் என்று உருகிக் கொண்டிருந்த நாம் இதுவரை நமக்கு ஒரு குழந்தை என்று நினைத்துப் பார்க்கவே இல்லையே! என் வயிற்றிலும் ஒரு உயிர் உருவாகிறது!

அதற்குக் காரணமான கணவரின் மீது அன்பு பொங்கியது. அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று உறுதிமொழிகள் முழைத்தன. அவர் விட்டேற்றியாக இருந்தார். 'என்ன வேணும்னாலும் செய். எனக்கு வேண்டியதை குறைத்து விடாதே' என்று சொல்லாமல் சொன்னார். முற்றிலும் நோகடிக்கும் நேரங்களில் மட்டும் உதவுவதாக வந்து இவளிடமிருந்து சுடு சொல் வாங்கி காயப்பட்டு ஒதுங்கினார். 'பிறக்கும் குழந்தைக்கும் எனக்கும் தொடர்பே வேண்டாம்' என்று ஒதுங்க ஆரம்பித்தார்.

'இப்போ உங்க பணி வாழ்க்கைக்கு தொந்தரவா இருக்கும் என்றால் இந்தக் கருவை வேணும்னா கலைச்சுரலாம். அப்புறம் நமக்கு குழந்தையா பிறக்காமல் போய் விடும்' தனக்குத் தெரிந்த வழியை மூச்சைப் பிடித்துக் கொண்டு சொல்லிப்பார்த்தாள். சொல்வதில் நம்பிக்கையே இல்லாமல் பேசுவது அவருக்கு வெள்ளிடை மலையாகத் தெரிந்தது. 'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அப்புறம் வாழ்நாள் முழுசும் என் குழந்தையை கலைக்கச் சொன்ன பாதகன் என்று பேச்சுக் கேட்க வேண்டி வரும். ஒன் விருப்பப்படியே பெத்து வளர்த்துக்கோ' மூச்சு விட முடிந்தது.

இவளது வாழ்வும், பேச்சும், மூச்சும் வயிற்றில் வளரும் குழந்தையைச் சுற்றி வர ஆரம்பித்தது. வீட்டு வேலைகளை செய்ய உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டாள். குழந்தைக்கு சரியாக சாப்பாடு கிடைக்க வேண்டுமே, அதற்கு பார்த்துப் பார்த்துக் கடைக்குப் போய் பரிந்து பரிந்து ஊட்டினாள், வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு. தனக்குப் பிடிக்காத உணவுகளைக் கூட குழந்தைக்கு வேண்டுமே என்று சாப்பிட்டுக் கொண்டாள்.

அவருக்குக் கிடைக்கும் நேரம் குறைந்து கொண்டே வந்தது. அவர் வேறு உறவுகளைத் தேடிக் கொண்டார். அவரது அலுவலகப் பணிகளில் மூழ்க ஆரம்பித்தார். அலுவலக நட்பு ஒரு பெண்ணின் வீட்டில் நண்பர்களின் கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. இவள் தன் குழந்தைக்கு கொடுத்த நேரம் போக மீதி கணவனுக்கு உதவி செய்ய முற்பட்டு அது அவருக்கு இன்னும் ஆத்திரத்தை வரவழைக்க ஆரம்பித்தது.

வீட்டில் அது சரியில்லை, இது சரியில்லை என்று வாக்குவாதங்கள் முளைத்தன. இந்த நேரத்தில் சம்பாதிக்கவும் முடியாமல் வீட்டில் குழந்தை பெற உட்கார்ந்து விட்ட இவள் மீது மோகனுக்கு ஆத்திரம் அதிகம். அதை சரிவர வெளிப்படுத்த முடியாமல் அவ்வப்போது வன்முறையாக வெடித்துக் கொண்டிருந்தது.

Labels:

நெடுங்கதையின் சுருக்கம் - 1

நினைவு தெரிந்த நாளிலிருந்தே பொறுப்பேற்றுக் கொள்வது என்பது அவளுக்கு இயல்பாகவே வந்தது. வீட்டில் கடைசிப் பெண்ணாக பிறந்ததால் அவளது அம்மா சின்னக் குழந்தைகளை எப்படி வளர்த்தார் என்று பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. குழந்தைப் பருவத்தில் அவளுக்கு விருப்பமான கடமைகளில் ஈடுபடாமலேயே வளர்ந்து விட்டாள்.

உடலும் வளர்ந்து உள்ளமும் வளர்ந்து வெளியுலகில் அடியெடுத்து வைத்து, உலகில் தனக்கென இடத்தில் தனக்கென பணிகளை உருவாக்கிக் கொள்ளும் பாதையில் நடக்கும் போது ஒரு தவிப்புடனேயே இருந்து கொண்டிருந்தாள். ஏதோ குறைகிறது. மற்ற மாணவர்கள் எல்லாம் கல்லூரி வாழ்க்கையை "அனுபவித்துக்" கொண்டிருக்கும் போது இதில் அனுபவிக்க என்ன இருக்கிறது என்றுதான் அவளுக்குத் தோன்றியது.

சீக்கிரம் வளர்ந்து உலக வாழ்க்கையில் முற்றிலுமாக மூழ்கி, சின்னஞ்சிறு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்குவதிலும், மற்ற வீட்டு சமூக பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதிலும் ஈடுபடத்தான் மனம் துடித்தது. பணி செய்ய வேண்டும், படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்ய வேண்டும், வீட்டுக்குள்ளேயே முடங்கி விடக் கூடாது என்பதை எல்லாம் படித்து துடிதுடிப்புடன் மனதுக்குள் குறித்துக் கொண்டாள்.

வேலைக்குப் போகும் போது அக்காவின் குடும்பத்தில் தங்கியிருந்து அவளது குழந்தைகளை சீராட்ட ஆரம்பித்தாள். வேலையில் அவளைப் போல சமர்த்து கிடையாது. நல்ல சம்பளம், நல்ல பேர், தேவைக்கு மேல் அங்கீகாரங்கள். ஆனால், அவளது மனதுக்கு நிறைவளித்தது அந்த குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம்தான். அவளது அக்காவுக்கும் பெருமையோ பெருமை. என் தங்கச்சி எவ்வளவு சமர்த்தா குழந்தைகளை பார்த்துக் கொள்கிறாள். குழந்தைகளும் சித்தியின் மீது பாசத்தை பொழிந்தன.

அக்காவுக்கு இன்னொரு குழந்தை பிறக்கவிருக்கும் போது இவளையே பார்த்துக் கொள்ளச் சொல்லித் தீர்மானித்து விட்டார்கள். இவளுக்கும் கொள்ளாத மகிழ்ச்சி. என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டார்களே. அக்கா தங்கச்சியின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தாள்.

குழந்தை பிறந்த நாட்களில் தனது அலுவலகப் பணிகளுக்குக் கூட இரண்டாம் இடம் கொடுத்து விட்டு முழு மூச்சாக குழந்தை வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்தாள். இந்தக் குழந்தை வலிகள், ஏமாற்றங்கள் இல்லாமல் வளர்த்து மலர்ந்து விட்ட பிறகு நாம் நினைத்தால் அலுவலத்தில் ஒரு தம் பிடித்து மேலே வந்து விட முடியாதா என்ன! இளமையின் நம்பிக்கை. இரவுகளும், பகல்களும் விழித்தாள். குழந்தைக்கு தேவைகள் போக நேரம் இருந்தால்தான் அலுவலகம் போவது. உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே என்று நண்பர்கள் உபதேசிக்கும் அளவு மாற்றம் தெரிந்தது.

இதற்கிடையில் வயது வந்த எதிர்பார்ப்புகளின் உறவும் தலையைக் காட்டியது. கல்யாணமே எனக்கு வேண்டாம் என்று பதின்மப் பருவ வீம்பு கனிந்து கல்யாணம் செய்தால்தான் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியும் என்பது உறைத்தது. மனதுக்குப் பிடித்த நண்பரை மனதுக்கினியவர் ஆக்கிக் கொள்ள முற்பட்டாள். அவருக்கு இவள் மீது அளப்பிலா காதல். ஆனால் அக்கா குடும்பத்துக்காக இப்படி தனது வாழ்க்கையை குலைத்துக் கொள்வதாக ஒரே வாக்குவாதம்.

'ஒருவனை மனதால் நினைத்து விட்டால், வேறு யாரையும் இந்த பிறவியில் நினைக்க மாட்டாள் தமிழச்சி' என்றெல்லாம் உறுதி பூண்டு அவருக்கு பொறுமையாகவும் சண்டை போட்டும் தனது கருத்துக்களை விளக்க முயன்று கொண்டிருந்தாள். அவரும் பிடியை விட்டு விடவேவில்லை. அவரது மனம் கோணக் கூடாதே இன்று சில மாலைகளில் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை விட்டுப் போய் இரண்டையும் நரகமாக்கிக் கொண்டிருக்கிறாள். குழந்தைக்கு முழு கவனம் கிடைக்கவில்லை. முக்கியமான தருணங்களில் அவரது கெடுபிடிக்கு ஈடு கொடுக்கப் போய் அக்காவுக்குக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

இன்னொரு பக்கம் திருமணம் செய்யும் முன்னாலேயே சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு கொள்கை. மோகனிடம் பேசி அவரும் அதே எண்ணத்தில் இருப்பதைப் பார்த்து பெரிய மகிழ்ச்சி. அது வரை தான் சேமித்த சேமிப்புகளைப் போட்டு புறநகரில் நல்ல ஒரு மனை வாங்கினார்கள். நிலம் வாங்குவது இவள் பொறுப்பு, வீடு கட்டுவது அவரது பொறுப்பு, செலவு என்று பேச்சு. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்று நிறுவிக் காட்டும் பெருமை இரண்டு பேருக்கும். அந்த அலைச்சல்களிலின் போது குழந்தை நினைவாகவும், குழந்தையுடன் செலவிடும் நேரங்களில் அவருடன் போட்ட சண்டைகளின் வாட்டமுமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

குழந்தை வளர்ப்பிலும் உறுதியான கருத்துக்கள் உண்டு. குழந்தையை தன் போக்கில் வளர விட வேண்டும். பெரியவர்களின் விருப்பங்களை குழந்தையின் மீது திணிக்கக் கூடாது. 'ஒன்றரை வயது குழந்தை பாட்டுப் பாடிக் காட்ட வேண்டும். ஒரு வயது குழந்தைக்கு ஒப்பனை செய்து காட்சிப் பொருளாக்க வேண்டும்.' என்பதெல்லாம் மடத்தனம் என்பது இவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

அவள் அக்காவுக்கு நாளாக நாளாக ஏமாற்றம். 'நம்ம குழந்தையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுவாளோ! மூத்த இரண்டு குழந்தைகளும் நினைவு தெரிந்த பிறகுதான் இவள் பார்த்துக் கொள்ளும் நிலைமை வந்தது. இந்தச் சின்னதை ஆரம்பத்திலிருந்தே இப்படி ஆக்கி விட்டால் என்ன ஆவது.'

அக்கா வீட்டின் வரவேற்பு நின்று போக ஆரம்பித்தது. ஒட்டிக் கொண்டிருந்த குழந்தைகள் பள்ளிக்குப் போக ஆரம்பித்து புதிய ஆயாக்களுடன் உலகைக் காண ஆரம்பித்திருந்தன. குட்டிப் பாப்பாவைப் பார்த்துக் கொள்ள கொஞ்சம் தூரத்து உறவான அத்தை ஒருத்தியை பல குழந்தைகளை வளர்த்து அனுபவம் கொண்டிருந்த அத்தையைக் கொண்டு வந்து விட்டார்கள். வீடு இவளுக்கு அன்னியப்பட ஆரம்பித்தது. 'வேலையை முடித்து விட்டு வந்தால் உன் அறைக்குள் இருக்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். சாப்பிடலாம். கடைக்குப் போகலாம். அத்தை, அக்கா, அத்தானுடன் வம்பளக்கலாம்.' குழந்தைகள் பார்க்கும் போது ஹாய் ஹலோ சொன்னார்கள். உரக்க ஆரவாரம் செய்தார்கள். அத்தோடு அவரவர் வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள். அத்தை குட்டிப் பாப்பாவை முழு உரிமை எடுத்துக் கொண்டிருந்தாள்.

இந்தக் குழந்தைக்கு என்னென்ன செய்ய வேண்டும். எப்படி எப்படி வளர்க்க வேண்டும் என்றெல்லாம் கண்ட கனவுகள் எல்லாம் நொறுங்கிப் போயின. இதற்கிடையில் மனதில் கொண்டிருந்த மோகனும் பொறுமை இழக்க ஆரம்பித்திருந்தார். 'உன்னை நம்பி என் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ள முடியாது.' என்று வேறு நட்புகளை வளர்த்துக் கொண்டிருந்தார். அதை இவளால் தாங்கிக் கொள்வது முடியத்தான் செய்தது. 'என் கணவன் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைப்பதெல்லாம் பத்தாம் பசலித்தனம். அவர் பலருடன் நட்பாக இருக்கட்டுமே, என் கணவராகவும் பிற்காலத்தில் இருந்து கொள்ளலாம்' என்று தன் மனதில் சமாதானம் செய்து கொண்டாள்.

இதற்கிடையில் வீடு கட்டும் பணி வேறு. யாரோ கட்டி வைத்த வீட்டில் போய் நாம் வாழக் கூடாது. நாமே பார்த்துப் பார்த்துக் கட்ட வேண்டும் என்று ஒரு பொறுப்பாளரை வைத்துக் கொண்டு இரண்டு பேரும் அலைந்து கொண்டிருந்தார்கள். அதில் கருத்து வேறுபாடுகள். தாம் பிடித்த பிடியில் எளிதில் விட்டுக் கொடுத்து விடாத பிடிவாதக் காரர்கள்தான் இரண்டு பேருமே. நாளொரு சண்டையும் பொழுதொரு வாக்குவாதமுமாக வீட்டை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கான செலவு அனைத்தும் மோகனின் வருமானத்திலிருந்து கரைந்து கொண்டிருந்தது.

அக்காவை ஒரு நாள் எதிர் கொண்டு, வேறு இடத்துக்குப் போய் விடுவதாகச் சொன்னாள். 'ஏண்டி, நான் உனக்கு இவ்வளவு செய்த பிறகு இப்படித் திடீர்னு விட்டுட்டுப் போவதாகச் சொன்னால் எப்படி' என்று கண்ணீர் விட்டாள். 'நீ இல்லாமல் குழந்தைங்க எல்லாம் ஏங்கிப் போய் விடாதா' என்று காரணமும் சொன்னாள். அது எவ்வளவு தூரம் உண்மை என்று அவளுக்கே தெரியும். குழந்தைகள் இன்றைக்கு டிபனுக்கு மேகி நூடுல்ஸ் இல்லை, ரவா உப்புமா என்று சொன்னது போலக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு விளையாடப் போய் விட்டார்கள்.

வலித்தது, நிறைய வலித்தது. அந்த நேரத்தில் மனதுக்கு ஒத்தடம் கொடுத்திருக்கக் கூடியவர் அவரது கவலைகளில் மூழ்கியிருந்தார். வளர்ந்து கொண்டே போகும் வீட்டைப் பற்றியும், அதற்கு செலவாகும் பணத்தைப் பற்றியும், அதற்கென்று எடுத்த கடனைப் பற்றியும்தான் அவரது பேச்சு இருந்தது. 'அக்கா வீட்டை விட்டுப் போகிறாயா, நல்லது. இனிமேலாவது வேலையில் அதிக கவனம் செலுத்து. நம்ம வீட்டு பணிகளுக்கு நேரத்தைச் செலவளி ' என்று கிட்டத்தட்ட கொண்டாட்டமாக பேசி விட்டார்.

Labels:

2020-05-25

மே மாதம் 25ம் தேதி. காலை மணி 7.

நான்கு மணிக்கு முன்பே விழிப்பு வந்து விட்டிருந்தாலும் ஐந்து மணிக்குத்தான் எழுந்திருந்தேன். முந்தைய நாள் ஏழரை மணிக்குப் பிறகு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். பழைய நண்பர்கள், உறவுகள், நிறுவன சக ஊழியர்கள் எல்லோரையும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

கடைசியாக அழைத்தவரை தொழில் முறையில் அறிமுகம். என்னுடைய வலைப்பதிவுகளைப் படித்து நண்பராகி நிறுவனம் நடத்துவதில் உள்ள சிரமங்களைப் பகிர்ந்து கொள்பவராக இருந்தார். நேற்று தொடர்பு கொள்ளும் போது உற்சாகமாக இருந்தார். அடுத்த வாரம் தமிழ்ஈழம் போவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறாராம். வைகோ தலைமையில் அவர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆயிரம் பேர் மாநாட்டில் கலந்து கொள்ளப் போகிறார்களாம். கட்சி ஆரம்பித்து 25 ஆண்டுகளுக்குப் பிறகும், மற்ற கட்சிகளின் பணநாயகத்துக்கிடையே தாக்குப்பிடித்து நிற்பது ஒரு வகையில் சாதனைதான். எளிதில் உணர்ச்சி வசப்படுபவராக, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத இளிச்சவாயராக அரசியல் நடத்தி போட்டியிட்டுக் கொண்டு வெளியில் வந்த தி மு கழகத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தவருக்கு புத்துயிர் அளிப்பதாக அரசியல் சீர்திருத்தங்கள் வந்து சேர்ந்தன. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அவரிடம் பேசி முடித்த பிறகு நாடாளுமன்ற மக்களவையில் நடக்கும் விவாதத்தையும் வாக்கெடுப்பையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சீனாவில் நடக்கும் உள்நாட்டு போராட்டத்தைக் குறித்த விவாதம். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா என்ன முடிவெடுக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கும் அமர்வு. யார் யார் எப்படி வாக்களிப்போகிறார்கள் என்று முடிவு செய்வதற்கு முன்பு ஒவ்வொரு தரப்பிலிருந்தும் இரண்டிரண்டு பேர் பேசினார்கள்.

அமெரிக்காவைச் சார்ந்த தாய்வானிலிருந்து செயல்பட்டு வந்த தேசியக் கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு, பெய்ஜிங்கிலிருந்து நாட்டை 70 ஆண்டுகளாக ஆண்டு வரும் கம்யூனிஸ்டு கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பு, தேசிய ஆட்சி ஒன்றை ஏற்படுத்தி புதிய அரசியலமைப்பு சட்டம் வகுத்து அதன்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று மூன்றாவது தரப்பு. அரை மணி நேரத்தில் விவாதங்கள் முடிந்தன. முதலில் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பு. ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் தனது தேர்வை குறிப்பிட்டதும், அவர்களது தொகுதி, தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, இவர் தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை என்று பட்டியல் வளர்ந்து கொண்டே போனது.

அடுத்த 1 மணி நேரத்தில் பொது வாக்கெடுப்பு நடக்கும். தமது தொகுதி உறுப்பினர் அளித்த வாக்கை ஏற்றுக் கொள்ளாதவர்கள், தமது வாக்கை மாற்றி அளிக்கலாம். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையிலிருந்து மாற்று வாக்குகளைக் கழித்து விட்டு உறுப்பினரின் வாக்கின் மதிப்பை எடுத்துக் கொள்வார்கள்.

தினசரி நடக்கும் வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ள யாருக்கும் நேரமும் விருப்பமும் இருப்பதில்லை. உறுப்பினரின் முடிவில் ஒரு சில வாக்குகள் மட்டுமே மாற்றாக பதிவாகும். இது போன்று முக்கியமான நேரங்களில், பங்கெடுப்பு பல ஆயிரங்களாக, சில நேரங்களில் பாதிக்கும் அதிகமாகக் கூடப் போக நேரிடும். எந்த முடிவையும் ஒவ்வொரு வயது வந்த வாக்காளரும் தீர்மானிக்கும் உரிமை தொழில்நுட்பத்தின் சாதனை. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலில் பணத்தை வாரி இறைத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கேட்பார் யாருமின்றி தனது ஆதாயத்துக்கு பணம் சம்பாதிக்கும் அரைகுறை மக்களாட்சியிலிருந்து வெகு தூரம் வந்து விட்டிருக்கிறோம்.

2020-05-24

மே மாதம் 24ம் தேதி. மாலை மணி 6.11

முன்பெல்லாம் flexi-timings என்று நிறுவனங்களில் ஒரு முறையை செயல்படுத்துவதைப் பற்றி பெரிதாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டிலிருந்தே வேலைகளைப் பார்த்துக் கொள்வது, தேவைப்படும் போது மட்டும், முக்கியமாக குழு சந்திப்புகள், விவாதங்களுக்கு மட்டும் அலுவலகத்துக்கு வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் வருவது என்று நடைமுறை பேசப்பட்டு வந்தது. வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் போது என்னென்ன சிக்கல்கள் வரும் அவற்றை எப்படிக் கையாளுவது என்பது ஒரு பெரிய தடையாக இருந்தது.

ஒரு பொத்தானைத் தட்டினால் 'நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், அடுத்தவர்கள் நம்மை அணுகலாமா' என்று வெளிப்படுத்திக் கொள்ளலாம். நமது வேலை திரையை, நமது உருவத்தை மற்றவர்கள் பார்க்கலாமா என்று அமைத்துக் கொள்ளலாம். அதைப் போல யார் யார் எங்கெங்கு என்னென்ன வேலையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று மூன்றாவது திரையின் வலது ஓரத்தில் பார்த்துக் கொள்ளலாம். சுஜாதா இணையத்தை அறிமுகம் செய்து எழுதிய புத்தகத்தின் தலைப்பைப் போல உலகம் உண்மையிலேயே வீட்டுக்குள்ளேயே வந்து விடுகிறது.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை பார்த்தால் மட்டும் போதாது, அந்த எட்டு மணி நேரத்தில் குறைந்தது 6 மணி நேரம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டு அவர்கள் அணுகும் நிலையில் இருக்க வேண்டும் என்று நெறி வகுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தூங்கும் நேரம் 6 மணிகள், அதிகாலை 4 மணிகள், மாலையில் இரண்டு மணி நேரம் தவிர வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதுதான் எனது விருப்பம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. வித்யா சரியாக 6 மணி நேரத்துக்கு மேல் ஒரு நிமிடம் கூட பொது இணையத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. என் வாழ்க்கையை எனது சுயத்தை வைத்துக் கொள்வது எனது உரிமை என்று அவளது வாதம். அதுவும் சரிதான்.

இப்படி எழுதும் போது கணினித் திரை மற்றவர்களுக்குக் காட்டுவதில்லை. தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தகவலையும் போட்டு விட்டால், புருவங்கள் முடிச்சிட நான் உட்கார்ந்திருப்பதை, நிறுவன சகாக்களும், உறவினர்களும், நண்பர்களும் - இணைப்பில் உள்ள, அணுகல் கொடுத்துள்ளவர்கள் - பார்த்துக் கொள்ளலாம். அப்படிப் பார்ப்பது நம்ம இமேஜை பலப்படுத்தும் என்று ஒரு நம்பிக்கை. எழுதியதை பதிப்பதற்கு முன்பு 24 மணி நேரமாவது இடைவெளி கொடுக்க வேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டேன். மற்றவர்களைப் பற்றிக் குறிப்பிடும் வாக்கியங்களில் பல மடங்கு கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

மதிய உணவுக்கு எல்லோரும் வீட்டில் சந்திக்க வேண்டும் என்பது வீட்டு விதிமுறை. நேற்றைக்கு மதி தனது கருத்தரங்கை முடித்து விட்டு வந்து விட, கார்த்திக் தனது அடுத்த வடிவமைப்பு முடித்து விட்டதாகச் சொன்னான். வித்யாவின் 3 மணி சந்திப்பு வரை எல்லோரும் நிதானமாகச் சாப்பிட்டு பேசிக் கொண்டிருந்தோம். கலை, ராகவ், சுசீலா, தனஞ்சய், கண்ணன், சின்ஹா எல்லோரும் மேசைக்கு வந்து விட்டார்கள். மதியின் பேச்சு குறித்து எல்லோரும் ஒரு வார்த்தை கேட்டு விட்டார்கள்.

சின்ன வயதில் அவ்வளவு சண்டை போட்ட, அவ்வளவு சிணுங்கிய தனது தங்கை இப்படி ஆயிரக்கணக்கான பேரின் கவனத்தை ஈர்க்கும் கருத்தரங்கில் பேசியது கார்த்திக்கு பெருமையாக இருந்திருக்கிறது. வெளிப்படையாக வாய் விட்டு பாராட்டினான். மதியின் உரையை விண்வெளி கழகத்தின் இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் சுட்டி கொடுத்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் 300 மில்லியன்களுக்கும் அதிகமான பேர் படித்திருக்கிறார்கள். இனிமேல் இந்தப் பெண்ணைக் கையில் பிடிக்க முடியாது. அவளே வழக்கம் போல தனது ஐஸ்கிரீம் வேட்டையில்தான் கவனமாக இருந்தாள்.

'உனது கருத்துக்களுக்குக் கிடைத்திருக்கும் மதிப்பைப் பார்த்தாயா! இனிமேல் பேசும் போதும் எழுதும் போதும் கவனமாக இருக்க வேண்டும். நீ என்ன சொன்னாலும், அதைப் படிப்பதற்கு ஒரு கூட்டமே காத்திருக்கும். அந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது எளிதான வேலை கிடையாது'

அந்த நேரத்தில் அழைப்பு மணி அழைக்கும் ஓசை. அஷ்வினா. இரண்டு வாண்டுகளுடன் உள்ளே வந்தாள். மதிய உணவுக் கூடம் கலகலப்பாக இருப்பது வித்யாவுக்கு மிகவும் பிடித்த ஒன்று. வெண்டைக்காய் பொரியலும், தக்காளி பச்சடியும் சர சரவென்று உள்ளே போய்க் கொண்டிருந்தன.

அஷ்வினா அவர்கள் வீட்டில் விளைந்த மாம்பழங்களை ஒரு கூடை கொண்டு வந்திருந்தாள். அதை மாம்பழம் வெட்டும் எந்திரத்தில் போட்டு துண்டு துண்டுகளாக வெளியில் எடுத்து விட்டான் கார்த்திக். இப்படி எந்திரங்கள் வடிவமைப்பதில் வித்தகனாக இருக்கிறான். 'மாம்பழம் வெட்டுவதுக்குன்னு ஒரு எந்திரம் செய்தால் அது எத்தனை பேருக்கு பயன்படும், எதுக்கு நேரத்தை வீணாக்குகிறாய்' என்று அடாவடி கூட செய்து பார்த்து விட்டேன். 'எனக்குக் கண்ணில் பட்ட தேவைக்கு நான் விடை உண்டாக்குகிறேன். அது இன்னொருவருக்கு எப்படி பயன்படும் என்று என்னால் எல்லா கோணங்களிலும் சிந்திக்க முடியாவிட்டாலும், அவரவர் தமக்குத் தேவைப்படி பயன்படுத்திக் கொள்வார்கள். நான் இதை உருவாக்காமலே இருந்தால் அது எல்லாம் கிடைத்திருக்காமல்தானே போகும். துணி துவைக்கும் எந்திரத்தை லஸ்சி செய்யப் பயன்படுத்திய கதை எல்லாருக்கும் தெரிந்ததுதானே' இவர்களிடம் பேசி ஜெயித்து விட முடியாதுதான்.

Labels:

2020-05-23

நேரம் ஒன்பது மணி 40 நிமிடங்கள். ஒரு வாரத்துக்கு இடைவிடாமல் வேலைகளில் மூழ்கியிருந்து விட்டு இன்றைக்குக் கொஞ்சம் இளைப்பாறுதலாக எழுந்திருந்து காலை உணவு சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருக்கிறேன். நேற்றைக்குக் காலையில் நான்கு மணிக்கு எழுந்து விட்டிருந்தேன். காலையில் எழுந்ததும் வழக்கம் போல காலைக் கடன்களை முடித்து விட்டு நாட்குறிப்பு எழுத உட்கார்ந்தேன். முந்தைய நாளில் நடந்தவை, நாளிதழில் படித்தவை, நேற்றைக்குரிய திட்டங்களையும் எழுதி முடிக்கும் போது மணி ஐந்தரை மணி அடித்து விட்டிருந்தது.

கீழ்த்தளத்தில் யாரோ எழுந்து விட்டது போல ஓசைகள் கேட்டன. எனக்கும் சூடாக ஏதாவது குடிக்கலாம் என்று தோன்றவே, கீழிறங்கி அடுக்களைக்குள் போனேன். பின் கதவைத் திறந்து தோட்டத்துக்குள் நுழைந்தேன். இன்றைக்கு வெண்டைக்காய்கள் சரியான பருவத்தில் வந்து விட்டிருப்பதாகத் தோன்றியது. அவற்றைப் பறித்து காய் கூடையில் வைத்துக் கொண்டேன். தக்காளிக் காய்களாகவே பறித்து பச்சடி செய்யலாம் என்றும் ஒரு எண்ணம் வர பச்சையாக இருந்த தக்காளிக் காய்களும் கூடைக்குள் போயின.

முந்தைய நாள் நன்கு வெயிலடித்திருந்ததால் சுடுதண்ணீர் நிறைய நிரம்பியிருந்தது. இன்றைக்கு சூரிய சக்திக் கலனின் சூட்டை இழக்காமல் தடுக்கும் பூச்சை மேம்படுத்துவதற்கு தொலைபேச வேண்டும். சுடுதண்ணீரை ஒரு பீங்கான் கோப்பையில் பிடித்து, அரைத்து வைத்திருந்த துளசி, சுக்குப் பொடியையும் சிறிதளவு தேனையும் சேர்த்து சூடாகக் குடித்து விட்டு அடுத்த வேலை.

அங்கங்கு விலகியிருந்த பொருட்களை எல்லாம் அதனதன் இடத்தில் வைத்து விட்டு, இரண்டு நாட்களாக அழுக்காகி இருந்த துணிகளை சலவை எந்திரத்தில் போட்டுக் கொண்டேன். மின்கலனில் மின்சார அளவு நாள் முழுமைக்கும் போதுமானதாகத்தான் தெரிகிறது. இன்றைக்கும் எல்லா வேலைகளையும் முடித்துக் குளித்து தியானமும் செய்த பிறகுதான் வெளியுலகச் செய்திகளை உள்ளே விட வேண்டும். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் இயக்கியைப் பயன்படுத்தி தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்து விட்ட நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு மட்டும் குறையவேவில்லைதான்.

வீட்டு வேலைகளை முடித்து விட்டுக் குளித்து விட்டு வெளியில் வரும் போது கார்த்திக்கும் எழுந்து விட்டிருந்தான். அவன் அடுத்த தெருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க காலையில் போகும் நாள். அவனுக்குக் குடிப்பதற்கான பானமும் சில நிமிடங்களில் தயாரித்து விட்டு மள மளவென விளையாட்டு உடைகளை மாட்டி விட்டு தனது மிதிவண்டியை எடுத்துக் கொண்டு பாய்ந்து விட்டான். இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு ஆளைப் பார்க்க முடியாது.

மதி இன்றைக்கு அமெரிக்க கலாச்சார மையத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான தயாரிப்புகளைச் செய்து முடித்திருந்தாள். ஒன்பதரை மணிக்கு அண்ணா சாலைக்குப் போக வேண்டுமானால், இப்போதே எழுந்தால்தான் புறப்பட்டு தொடர்வண்டியைப் பிடித்துப் போகச் சரியாக இருக்கும். குரல் கேட்டதும் தூக்கத்திலும் அவளுக்கு கருத்தரங்கு நினைவு வந்து விட்டது. முகம் மலர புன்னகைத்துக் கொண்டே எழுந்து விட்டாள்.

அத்தோடு அறைக்குள் போய் தியானத்தில் உட்கார்ந்தேன். இன்றைக்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாக எழுந்து விடக் கூடாது என்ற உறுதியுடன் உட்கார்ந்திருந்தாலும் உட்கார்ந்த சிறிது நேரத்தில் வித்யா எழுந்து விட்ட ஓசைகள் கேட்க ஆரம்பித்து விட்டன. தியானத்தில் உட்கார்ந்திருக்கும் போது தொந்தரவு செய்து விடக் கூடாது என்ற கவனத்துடன் நடமாடிக் கொண்டிருந்தாலும், அவளது மனது விழித்ததும் எனக்குள்ளும் ஒரு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அவள் தலைமைப் பொறுப்பு வகிக்கும் நகரக் குழுவின் கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. 45 பேர் கலந்து கொள்ளும் கூட்டம். அதற்கான தயாரிப்புகளைச் செய்து கொள்ள வேண்டும்.

அதிகம் சலனப்படாமல் தியானத்தைத் தொடர்ந்தேன். இன்றைக்கு எப்படியாவது பொருள் வாங்கியவர்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு உள்ளிடும் கருத்துக்களை தனியாகத் தொகுத்துக் காண்பிக்க வேண்டும் என்ற தேவையை நிறைவேற்றி விட வேண்டும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. மாலை 7 மணிக்கு அமைச்சரவையின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் கல்விச் சீர்திருத்தங்களை ஐரோப்பிய நாடுகளிலும் செயல்படுத்துவதற்கான திட்டக்குழுவின் உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு முதல் கூட்டம்.

காலையில் ஜப்பானில் காஃபி என்று பழைய திரைப்படப் பாடல் ஒன்று வரும். அது போல வீட்டுக்குள் இருந்து கொண்டே நான்கு கண்டங்களில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் விவாதங்கள் நடத்தி விட முடிகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் விண்வெளியில் குடியிருப்பு அமைக்கும் செயல்திட்டம் ஒன்றையும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

தியானம் முடிக்கும் போது மணி 8 ஆகியிருந்தது. படிக்கும் அறைக்குள் வந்து செய்தித் தளங்களை இயக்கினேன். இதைப் படித்து விட்டு நியூ கினியா நாட்டைப்பற்றிய விபரங்களைப் பார்க்க வேண்டும். தமிழ்ஈழத்தில் நடக்கப் போகும் உலகத் தமிழ் மாநாடு குறித்த செய்திகளை மேய்ந்து விட்டு வலைத்தளத்தில் எழுதியவற்றை பதிந்து விட்டேன். உலகத் தமிழ் மாநாட்டை தொலைதொடர்பாக நடத்தாமல் பங்கேற்பவர்கள் எல்லோரும் நேரில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்கிறார்கள். அத்தனை ஆண்டுகள் போரில் அவதிப் பட்ட மக்கள் உருவாக்கிய சாதனைகளை உலக தமிழ் சமூகம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். அதே மாநாட்டின் parallel அமர்வுகளாக சிங்கள மொழி வளர்ப்பு மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

28ம் தேதியிலிருந்து 30ம் தேதி வரை மூன்று நாட்கள். போக வேண்டும் என்றுதான் ஆசை. மூன்று நாட்கள் விடுமுறை ஆகி விடும். மற்ற பணிகளை எல்லாம் காத்திருக்கச் சொல்லி விடலாம்.

ஒன்பதரை மணிக்கு தொழில் நுட்ப ஆய்வுக் கூட்டம். அது சீக்கிரமாக முடிந்து விட்டால் மதியின் கருத்தரங்கையும் பார்த்துக் கொள்ளலாம். கருத்தரங்கை ஒரு திரையில் ஓட விட்டுக் கொண்டேன். அமைப்பாளர்கள் அரங்கில் நாற்காலிகளை அமைத்திருந்தார்கள். இது போல நேரடி விவாதங்களுக்கு செய்ய வேண்டிய பணிகளின் சிக்கல் மட்டும் குறைந்தபாடில்லை. ஒன்பதரைக்குள் ஒவ்வொருவராக ஆய்வுக்கூட்டத்துக்கு வந்து விட்டார்.

விண்வெளியில் தளம் அமைக்கும் போது இணையத்துடன் எப்படிப்பட்ட தகவல் பரிமாற்றம் இருக்கும் என்று தான் தயாரித்திருந்த விபரங்களைச் சுருக்கமாக விளக்கினார். மூன்று மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் பயணத்தில் கலந்து கொள்ளப் போகும் தயாரிப்புகளைக் குறிப்பிட்டு அதற்குள் நமது பயன்பாடுகளை விண்வெளியில் பயன்படுத்தும்படியாக செய்து விட வேண்டும் என்று சொன்னார். தான் தயாரித்திருந்த புதிய இடைமுகங்களைக் காண்பித்ததும் வேலை நிறைவாகப் போவதாக நம்பிக்கை ஏற்பட்டது.

அரை மணி நேரத்தில் கூட்டம் முடிந்து விட கருத்தரங்கு ஒலியை உயர்த்தினேன். நிறுவன காட்சித் திரையில் கூட்டத் திரை நகர்ந்து பொதுப்படையாக வைத்திருந்த கணினித் திரைகள் ஓட ஆரம்பித்தன. கருத்தரங்கில் அறிமுக உரைகள் மூன்று முடிந்து மதிக்கு முந்தைய உரையாளர் பேச ஆரம்பித்திருந்தார். வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று அடிக்குறிப்பு. இன்றைக்கு மொழி மாற்றத்தின் தரம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக வங்காள மொழியிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கும் போது பலருக்கு சறுக்கி விடுகிறது. புதிய மொழிமாற்றி இன்றுதான் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ் ஒலிபரப்பை மாற்றி வங்காள மொழியில் அவர் பேசுவதை ஒலிக்க விட்டேன். காதில் தேமதுரம் பாய்வது போன்ற உணர்வைத் தரும் மொழி. அவரது குரல் தமிழிலும் நன்கு ஒலிக்கிறது. உரையை மொழி மாற்றம் செய்து, பேசுபவரின் குரலிலேயே விரும்பிய மொழியில் கேட்டுக் கொள்ளும் வசதி பெரிய வரப்பிரசாதம்தான்.

மதி இந்தியில் ஆரம்பித்தாள். இந்தியில் முதுகலை படித்துக் கொண்டிருந்தாள். இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் இயக்கி அவள் எழுதி வெளியிட்டது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. அவளது குரல் மட்டுமில்லாமல் மனமும் ஒலிப்பதாகத் தோன்றுவதற்கு இன்னும் ஒரு காரணமாகப் போய் விட்டது. நான் கருத்தரங்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தனது கைக்கணினியில் குறித்துக் கொண்டாள். வித்யாவும் தனது தயாரிப்புகளுக்கு நடுவில் இங்கு கணினியைத் திருப்பியிருக்கிறாள். இரட்டை மகிழ்ச்சி.

கார்த்திக் வெளியிலிருந்து வந்தவன். எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டான். எத்தனை தடவை சொன்னாலும் கேட்பதில்லை. 'நீ கலந்து கொள்வதோடு இல்லாமல், கலந்து கொண்டாய் என்று பதிவு செய்யும் படி உன்னுடைய முகவரியிலிருந்து கலந்து கொள்ள வேண்டும்' என்று சொல்வது ஒரு பொருட்டே இல்லாமல் போய் விட்டது. விளையாடிக் களைத்து ஜொலித்துக் கொண்டிருந்த முகத்தைப் பார்த்து வாதம் ஆரம்பிக்க மனம் வரவில்லை. 'நான் எனக்காகப் பார்க்கிறேனா, அடுத்தவர்களுக்குக் காட்டிக் கொள்வதற்காகப் பார்க்கிறேனா' என்று ஒரு வீம்பு.

வித்யாவுக்குத் தெரிந்தால் ஒரு குட்டி போர்தான் நடக்கும். அவள் இருக்கும் வேலை நெருக்கடியில் இந்த நேரத்தில் இங்கு எட்டிப் பார்ப்பது சாத்தியக் குறைவுதான். மதியின் கருத்துச் சிதறல்கள் அறையை நிறைக்க ஆரம்பித்தன. நேற்று இரவில் எனக்குப் படிக்க அனுப்பியிருந்த பதிப்பிலிருந்து மேலும் பல மாறுதல்கள் செய்து இன்னும் செதுக்கி விட்டிருந்தாள். 10 நிமிடங்களுக்கான உரை. ஆரம்பிக்கும் போது நேரடியாகக் கலந்து கொண்டிருந்த 15 பேரைத் தவிர வெளியிலிருந்து 20 பேர் இணைந்திருந்தார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும் நூற்றுக்கணக்கான இணைப்புகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்று முனையம் காட்டியது.

இந்த நேரத்தில் நடக்கும் கருத்தரங்குகளுக்கு நல்ல வரவேற்பும் விளம்பரமும் கிடைக்கின்றன. அமெரிக்காவில் பின்மாலை, ஜப்பானில் பிற்பகல், சீனாவில் வேலை நேரம், மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலை ஆரம்பிக்கும் பொழுது. ஐரோப்பிய நாடுகளில் மட்டும்தான் அதிகாலையாக இருக்கும். நிகழ்ச்சியைப் பற்றிய கருத்துக்கள் சூடுபிடிக்க லண்டனிலிருந்தும் பல இணைப்புகள் சரசரவென்று உள்ளே நுழைந்தன. இந்தப் பெண் இந்த வயதிலேயே இப்படிக் கட்டிப் போட்டு விடுகிறாளே என்று பெருமையாக இருந்தது.

சரியாக 10 நிமிடங்களில் முடித்து விட்டாள். அதற்குள் 3368 கருத்துரைகளும் 216 விளக்கத் தேவைகளும் வந்து விட்டிருந்தன. விளக்கத் தேவைகளில் பார்ப்பவர்களின் தெரிவில் முதல் 5 இடங்களைப் பிடித்த கேள்விகளுக்கு பாரதி பதில் சொல்வார் என்று அறிவிப்பு வந்தது. இன்னும் 5 நிமிடங்கள் அவளுக்குக் கிடைக்கிறது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் போது அங்கு பூமியில் இருப்பது போன்றே பல மொழிகள், பல கலாச்சாரங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவளது கருத்துரையின் அடிப்படை. அது தொடர்பாக இருந்த ஐயங்களும், பதற்றங்களும் கேள்விகளில் நன்றாகவே தெரிந்தன. அப்படித் திட்டமிடுவதால் குடியேற்றத்துக்கான செலவுகள் 3% மட்டுமே அதிகமாகும் என்ற கணக்கீடுகள் எல்லோரையும் அசைத்துப் போட்டு விட்டது தெரிந்தது. இந்த ஆராய்ச்சியுரையின் முடிவால் குடியிருப்பில் கலந்து கொள்ள முன்வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கப் போகிறது.

அது ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்க நிறுவனத் திரையிலும் உரையாடல் வேண்டுகோள்கள் நிறைந்து விட்டிருந்தன. அடுத்த சனிக்கிழமை டோக்கியோவில் நடக்கும் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள முடியுமா? நேரடி விழாக்களில் கலந்து கொள்வதை முடிந்த வரை தவிர்ப்பது என்று முடிவு செய்திருந்தாலும் இது போன்ற வேண்டுகோள்கள் தவிர்க்க முடியாமல் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நேரடியாகக் கலந்து கொள்ள முடியா விட்டாலும், அவர்கள் விழாவுக்கு எனது கருத்துரையை அனுப்புகிறேன் என்று பதில் அனுப்பியதும் ஒரு பெரிய 'ஹூர்ரே' காதை அறைந்தது. இது போல வலுக்கட்டாயமாக ஒலி அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்ற கோட்பாட்டை அவ்வப்போது உடைப்பதும் தேவையாகத்தான் இருக்கிறது. 216 பேர்களும் ஒரே நேரத்தில் கூச்சல் போடுவது தொழில்நுட்பத்தின் அற்புதம்தான்.

வெளியில் வெயில் ஏற ஆரம்பித்திருந்தது. அறையில் வெப்பநிலையை பராமரிக்கும் கருவியின் ஹம் ஓசை இன்னும் ஒரு ஜதி உயர்ந்தது.